அதோ விழுந்து போய்க் கிடக்கிறது
தமிழரின் வாழ்க்கைப் புத்தகம்
கறையான் அரித்தும்
அரிக்கப்படாமலும்
தமிழரின் வாழ்வும்
இப்படித்தான் என்று உணர்த்தியபடி
நிரப்பப்படாத பக்கங்களைவிட
நிரம்பிய பக்கங்கள்தான் ஏராளம்!
தூசி தட்டிப் போடுவாருமில்லை
ஏனென்று எடுத்துப் பார்ப்பாருமில்லை
அநாதைக் குழந்தையாய்
ஆதரவற்றுத் தத்தளிக்கின்றது!
ஒவ்வொரு பக்கங்களும்
கறைபடிந்த ஓவியங்கள்
இல்லை கண்ணீர்க் காவியங்கள்!
ஒவ்வொரு வரியும் சொல்லும்
அதன் வேதனையை
எத்தனை இடப்பெயர்வுகள்
எத்தனை இழப்புகள்!
வீடிழந்து நாடிழந்து
சொந்த உறவுகளையும் இழந்து
அந்நிய தேசத்தில்
அகதிகள் என்னும் பட்டத்தோடு!
தாயைப் பிரிந்த மகளும்
தந்தையைப் பிரிந்த மகனும்
இறுதிவரை ஒன்று சேரமுடியாமல்
மரணித்த அவலங்கள் போதும்!
எழுந்து நிற்கும் முன்பே
உடைந்துவிட்டது ஊன்றுகோல்
உடைந்தபின் தான் தெரிந்தது
தரப்பட்டது ஊன்றுகோல் அல்ல
உடைந்தகோல் என்று
அதுகூடக் கானல்நீராகிப் போனது
போதும் போதும்
பட்ட துன்பங்கள் போதும்
இனியும் வேண்டாம்
இந்த அவலம் என்று
மனுக்கள் பல கொடுத்தபோது
அனைத்துமே
செவிடன் காதில் ஊதிய சங்கானது
சுழற்காற்றில் அடிக்கப்பெற்ற துரும்பாக வாழ்க்கைப்
புத்தகம் புரட்டப்படுகின்றது
கடைசிப் பக்கமாவது
சாதனையைத் தாங்கி நிற்காதா?
வெறும் கனவாகவே இன்றும்
இரவுக்குள் நடமாடியபடி
நகர்ந்த வண்ணம்
தமிழரின் வாழ்க்கைப் புத்தகம்.
